இந்திய- ஆஸ்திரேலிய உறவுகளை மேலும் வலுப்படுத்துவது குறித்த மாநாடு டில்லியில் நடத்த திட்டமிட்டப்பட்டிருந்தது.
இதில் கலந்து கொள்ள ஸ்காட் மோரிசன் இந்தியா வர விருந்த நிலையில் கொரோனா பாதிப்பு காரணமாக ரத்து செய்யப்பட்டது.
இரு நாட்டு பிரதமர்களும் வீடியோ கான்பரன்சிங் மூலம் இன்று ஆலோசனை நடத்தினர்.
இதில் இரு தரப்பு பரஸ்பரம் நட்புறவு , பாதுகாப்பு, வர்த்தகம், கடல்சார் ஒத்துழைப்பு உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்தும், உலகில் பரவியுள்ள கொடிய வைரசான கொரேனா தொற்று குறித்தும், இரு நாடுகளுக்கிடையே உறவு மேலும் செழிப்பாக வளர மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.பிரதமர் மோடி பேசியதாவது:
ஆஸி.,யில் கொரோனாவால் பாதித்தவர்களுக்கு, இந்திய மக்கள் சார்பில் வருத்தங்களை தெரிவித்து கொள்கிறேன்.
இந்தியா ஆஸ்திரேலியா இடையிலான உறவை வலுப்படுத்த இதுவே சரியான நேரம். நமதுநட்பை பலப்படுத்த ஏராளமான வாய்ப்புகள் உள்ளன.
மேலும், தற்போது ஏற்பட்டுள்ள சவால்களை, வாய்ப்பாக மாற்ற ஒரு சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.
நமது உறவை பொறுத்து தான், இந்த பிராந்தியத்தில் நிலைத்தன்மை நிலவும்.
கொரோனா பிரச்னையை ஒரு வாய்ப்பாக மாற்ற மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. அனைத்து துறைகளிலும் சீர்திருத்தங்களை கொண்டு வர நடவடிக்கை எடுத்துள்ளோம்.
இதன் பலன்கள் விரைவில் தெரிய வரும்.
கொரோனாவால் ஏற்பட்டுள்ள பிரச்னைகளில் இருந்து விடுபட ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். ஆஸி.,யுடன் உறவை வலுப்படுத்த இந்தியா உறுதிபூண்டுள்ளது.
இதனால், இரு நாடுகளுக்கு மட்டும் அல்லாமல், இந்தோ - பசுபிக் - பிராந்தியத்திற்கும், உலகத்திற்கும் இதனால், பலன் கிடைக்கும்.